Cinema

’என்னை ஏன் அழைக்கவில்லை..?’ : 80s நடிகர்கள் Reunion சந்திப்பு குறித்து பிரதாப் போத்தன் முகநூலில் வருத்தம்

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் ஹைதராபாத் இல்லத்தில் அண்மையில் தென்னிந்திய சினிமா உலகில் 1980 காலக்கட்டத்தில் கோலோச்சிய நடிகர் நடிகைகளின் சந்திப்பு நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக இந்த சந்திப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நடந்த சந்திப்பில் நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபு, ரகுமான், நாகர்ஜூனா, மோகன்லால், வெங்கடேஷ், ஜெகபதிபாபு, ரமேஷ் அரவிந்த், ஜெயராம், சுமன், சுரேஷ், சரத்குமார், பாக்யராஜ், ஜாக்கி ஷெராஃப், பிரியதர்ஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல், நடிகைகள் குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா, ராதிகா, நதியா, அமலா, சரிதா, சுஹாசினி, ரேவதி, ஜெயபிரதா, ஷோபனா, சுமலதா, லிஸ்ஸி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

10வது ஆண்டாக நடைபெறும் இந்த 80s ரீ யூனியன் பார்ட்டியை சிரஞ்சீவி தனது புது இல்லத்தில் பிரமாண்டமாக நடத்தினார். கருப்பு மற்றும் தங்க நிற ஆடைகளில் ஜொலித்த நடிகர் நடிகைகளின் இந்த சங்கமம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இதே 80களின் காலக்கட்டத்தில் நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்து தற்போது தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் பிரதாப் போத்தன்.

80s நடிகர் நடிகைகளின் ரீ யூனியன் பார்ட்டி தன்னை அழைக்காதது தொடர்பாக வருத்தத்துடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், 1980களில் நான் மிக மோசமான நடிகராக இயக்குநராக இருந்திருக்கலாம். அதனால் இந்த பார்ட்டிக்கு அழைக்காமல் இருந்திருப்பார்கள். இது எனக்கு வருத்தத்தையே கொடுக்கிறது.

சிலருக்கு நம்மை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. இருந்தாலும், வாழ்க்கை அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கும் என பதிவிட்டது மட்டுமல்லாமல், நெஞ்சில் ஒரு முல் படத்தில் இடம்பெற்றிருக்கும் "நேராகவே கேட்கிறேன்" என்ற பாடலை பகிர்ந்து 80களின் நான் தூங்கிக்கொண்டிருந்தேன் நினைக்கிறேன் எனவும் பிரதாப் போத்தன் பதிவிட்டுள்ளார்.