Cinema

"ரஜினியும், கமலும் இதில் எனக்கு ஜூனியர்கள்தான்” - டி.ராஜேந்தர் பேட்டி! 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்.

அப்போது பேசிய அவர், “என்னை வாழ வைத்த துறை இந்த சினிமாதான். எனக்கு பெயர், பெருமை என அனைத்தையும் கொடுத்த சினிமா இன்று நலிந்தும், சின்னாபின்னமாகியும் வருகிறது. எதிர்காலத்தில் என்னவாகுமோ எனத் தெரியவில்லை.

நண்பர்கள் வற்புறுத்தியதால் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ளேன். சினிமா விநியோகஸ்தர்கள் தேர்தலில் மாற்றம் வரவேண்டும். அப்போதுதான் தமிழகம் முழுவதும் சினிமா விநியோகம் சிறப்பாக இருக்கும்.

நவம்பர் 21ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட உள்ளேன். இந்த சினிமா துறை நிலைத்து நிற்க யாரை வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், “சினிமாவுக்கு வேண்டுமானால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு நான் வந்திருக்கலாம். ஆனால் அரசியலில் நான் சீனியர். அவர்களின் அரசியல் வருகை குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது அதிர்ஷ்டமும் வேண்டும்” எனத் தெரிவித்தார்.