Cinema

‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்குக்கு தாய்லாந்தை தேர்வு செய்யக் காரணம் என்ன? - ஆச்சர்ய தகவல்!

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர பின்னணி கொண்ட கதை என்பதால் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் மணிரத்னம் தீவிரம் காட்டி வருகிறார்.

ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி என முன்னணி சினிமா பிரபலங்கள் நடிக்கவுள்ள பொன்னியின் செல்வன் படம் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்படவுள்ளது. நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படபிடிப்பு தொடங்கும்போது வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

சுமார் 800 கோடி பட்ஜெட்டில் லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் மணிரத்னத்தின் ஆஸ்தான கூட்டணியான வைரமுத்துவும், ஏ.ஆர்.ரஹ்மானும் பணியாற்றவுள்ளனர். மேலும், ரவிவர்மன் ஒளிப்பதிவுப் பணியையும், கலை இயக்கத்தை தோட்டா தரணியும் மேற்கொள்ளவுள்ளனர். இந்நிலையில், ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள மணிரத்னம் தற்போது, படபிடிப்புக்கான இடங்களை உறுதி செய்வதற்காக தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

மணிரத்னமும், பிரபல சண்டைக் காட்சி வடிவமைப்பாளர் ஷாம் கவுசலும் தாய்லாந்தில் படகில் செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஷாம் கவுசல், இந்தி திரையுலகில் வெளிவந்த பல வரலாற்று கதைகொண்ட படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர். தற்போது, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாம் கவுசல் இணைந்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், பொன்னியின் செல்வன் கதையை தாய்லாந்தில் படமாக்குவதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அந்த நாட்டில் சோழர்களின் நாகரிகத்தை பின்னணியாகக் கொண்ட கோவில்கள் இருப்பதாலும், அது படத்துக்கு உகந்த வகையிலும் இருப்பதாலுமே தாய்லாந்தை தேர்வு செய்ததாக மணிரத்னம் தரப்பு கூறியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தோனேசியாவிலும் பொன்னியின் செல்வன் படமாக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.