Cinema

புலிகேசி பிரச்னை தீர்ந்தது; இப்போ புது பிரச்னை - வடிவேலுவால் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு சிக்கல்?

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர் வைகைப்புயல் வடிவேலு. எவ்வளவுக்கு எவ்வளவு புகழை சேர்த்திருந்தாலும் அவ்வப்போது சர்ச்சைகளிலும் வடிவேலு சிக்குவார்.

சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி இருந்த வடிவேலு, வெகு நாட்களுக்குப் பிறகு குணச்சித்திர நடிகராக விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் தோன்றினார். அதன்பிறகு அவரது எந்தப் படமும் ரிலீஸாகவில்லை.

தற்போது, இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் மீதான சிக்கல்கள் நீங்கி மீண்டும் கோடம்பாக்கம் பக்கம் திரும்பி இருக்கும் வடிவேலு, கமலின் ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது.

முதல் பாகத்திலும் இவர் நடித்திருந்ததால் அதன் சீக்வலான தலைவர் இருக்கின்றான் படத்திலும் வடிவேலு கதாபாத்திரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்க புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அது என்னவெனில், நடிகர் ஆர்.கே. நடித்து தயாரிக்க இருந்த ‘நானும் நீயும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அதற்காக அவரிடம் அட்வான்ஸாக 1 கோடி ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனது படத்தின் கதையில் மாற்றம் செய்யவேண்டும் என வடிவேலு கூறியதாகவும், அதனால் படத்தில் நடிக்காமல் தட்டிக்கழித்து வருவதாகவும் ஆர்.கே. கூறியுள்ளார். இதனால் ஷூட்டிங் தொடங்கப்படாததால் கொடுத்த முன்பணத்தை திரும்ப கேட்டும் வடிவேலு தராததாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் ஆர்.கே.

அதில், வடிவேலு தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கட்டும். ஆனால், எனக்கு கொடுக்கவேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தை கொடுத்தால் மட்டுமே அந்த படத்தை வெளியிட வேண்டும் என தனது புகாரில் ஆர்.கே. குறிப்பிட்டுள்ளார்.

இதனால், கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தின் வேலைகள் தொடங்குவதற்கு முன்பே சிக்கல் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.