Cinema

முடிவுக்கு வந்தது ‘ஜிப்ஸி’ சிக்கல்... சென்சார் போர்டு சான்றிதழால் படக்குழு அதிர்ச்சி!

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜூமுருகன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ட்ரெய்லரில் மதவெறிக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருந்தது. இந்தப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் இந்த படம் சென்சார் சிக்கல் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

மொத்தப் படப்பிடிப்பும் முடிந்த பிறகு, படத்தை தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. முதல் கட்ட தணிக்கையில் மறுக்கப்பட, இரண்டாம் கட்ட தணிக்கைக்குச் சென்றது 'ஜிப்ஸி'. அங்கும் சில காட்சிகளை நீக்கச் சொன்னதால், படக்குழு அதிர்ச்சியடைந்தது. இதனால், ட்ரிபியூனலுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ட்ரிபியூனலுக்கு அனுப்பட்டால் படம் வெளியாக தாமாதமாகும் என்பதால், இரண்டாம்கட்ட தணிக்கைக் குழுவிடம் என்னென்ன காட்சிகள் நீக்க வேண்டும் என்பதைக் கேட்டு வாங்கி, படத்தின் மூலக்கரு கெடாத வண்ணம் மாற்றியமைத்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பியது.

படம் பார்த்த அதிகாரிகள், படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.