Cinema

கதை திருட்டு விவகாரம்: பிகில் படத்துக்கு தடை கோரி வழக்கு- அட்லீ, ஏ.ஜி.எஸ்-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் 3வது முறையாக நடித்து உருவாகியிருக்கும் படம் பிகில். தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீசாகவிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், இந்துஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், பிகில் படத்தை வெளியிட தடைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இயக்குநர் செல்வா என்பவர், பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும், கால் பந்தாட்டத்தை மையமாக கொண்டு 256 பக்கங்களுடைய கதையை ஏற்கெனவே தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தும், சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கதையை சொல்லியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பிகில் படத்துக்கு தடைக் கோரிய இயக்குநர் செல்வாவின் மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, பிகில் படம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும், இயக்குநர் அட்லீக்கும் உத்தரவிட்டு விசாரணைக்கு நாளை (அக்.,16) ஒத்திவைத்தார்.