Cinema

எனக்கு போன் செய்து நீ இறந்துட்டியாமே என சிலர் கேட்டார்கள் - நடிகை ரேகா வேதனை!

ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் `100 % காதல்’. தெலுங்கில் வெளியான '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் படத்தில் நடிகை ரேகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய ரேகா, “இந்த நிகழ்ச்சியில் உங்களிடம் நான் சொல்ல விரும்புவது இதுதான். கடந்த ஆகஸ்ட் 17லிருந்து நான் இறந்துவிட்டது போலவும் கிராஃபிக்ஸ் செய்து யு-ட்யூப்பில் வீடியோக்கள் எல்லாம் வெளியிட்டு வருகிறார்கள்.

பல நேர்மையான ஊடகங்களுக்கு மத்தியில், இப்படியான தவறான தகவல்களைப் பரப்பி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் சிலரும் இருப்பது வேதனையளிக்கிறது. `விளம்பரம் தேடிக்கொள்ள நானே இதை செய்கிறேன்’ என அந்த வீடியோவுக்குக் கீழே கமெண்ட்கள் இருந்ததைக் கூட நான் பார்த்தேன்.

அதைப் பார்த்துவிட்டு நீ இறந்துட்டியாமே? என எனக்கே தொடர்பு கொண்டு சிலர் கேட்டார்கள். என் செய்தி தொடர்பான வீடியோவை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறாங்க. இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. ஆனால், பிரபலங்கள் இறந்துட்டா, அதை எட்டிப் பார்ப்பதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்.

இது என்னைவிட என்னை சார்ந்தவர்களுக்கு எவ்வளவு வருத்தத்தை உண்டாக்கும். இது போன்று எனக்கு முன்பும், பல பிரபலங்களுக்கும் நடந்துள்ளது. இனிமேலும் பலருக்கும் நடக்கும் என்பது பயத்தை அளிக்கிறது. ஊடகங்களும், அரசாங்கமும், இது போன்ற விஷயங்களை தடுக்கவும், இது போன்ற யூ-ட்யூப் சேனல்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேதனையைப் பதிவு செய்தார் நடிகை ரேகா.