Cinema

“ரூ.10 கோடியை வாங்கிவிட்டு நடித்து தரவில்லை” - கமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் புகார்!

படத்தில் நடித்து தருவதாகக் கூறி ரூ.10 கோடியை முன் பணமாக பெற்றுவிட்டு இன்னும் தரவில்லை என நடிகர் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

"2015ம் ஆண்டு வெளியான உத்தமவில்லன் படத்தின் போது சில சிக்கல் ஏற்பட்டதால் நடிகர் கமல்ஹாசன் தானாக முன்வந்து புதிய படம் ஒன்றில் நடித்து தருவதாகச் சொல்லி என்னிடம் இருந்து ரூ. 10 கோடியை முன்பணமாக கேட்டுப் பெற்றார்." என ஞானவேல்ராஜா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

4 ஆண்டுகள் ஆகியும் தன்னுடைய தயாரிப்பில் படமும் நடித்துத் தரவில்லை என்றும், வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த கமல்ஹாசன் தரப்பு, இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், ஞானவேல்ராஜாவிடம் எதுவும் உறுதியளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் மீது இவ்வாறு மோசடி புகார் எழுந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.