Cinema

“இந்தியன் 2 படத்தை தயாரிப்பது லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இல்லை” - தயாரிப்பு நிறுவன புகாரால் அதிர்ச்சி!

ஐங்கரன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கருணாமூர்த்தி தனது உதவியாளரான பானு என்பவருடன் சேர்ந்து, தங்களை ஏமாற்றி சுமார் 120 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக லைகா தயாரிப்பு நிறுவன இயக்குநர் நீலாகாந்த் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீலாகாந்தின் வழக்கறிஞர் ராம் சரண்யா, தங்களது நிறுவனத்தின் ஆலோசகராக கடந்த 2013ம் ஆண்டு இணைந்த கருணாமூர்த்தி தனது உதவியாளர் பானு என்பவருடன் இணைந்து, தங்கள் நிறுவனத்தின் அயல்நாட்டு உரிமத்தை விற்றதிலும், லைகா நிறுவனத்தின் பெயரில் ‘கத்தி’, ‘கோலமாவு கோகிலா’, ‘இப்படை வெல்லும்’, ‘தியா’, ‘யமன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து அதில் வந்த அதிகப்படியான லாபத்தை கையாடல் செய்ததிலும் சுமார் 90 கோடி ரூபாய் பணத்தை தனது ஐங்கரன் நிறுவன வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்தார்.

மேலும், லைகா நிறுவனத்தின் அனுமதியின்றி ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து தங்கள் நிறுவனத்திற்கு சுமார் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தங்கள் நிறுவனம் அவர் மீது வைத்திருந்த அதிகப்படியான நம்பகத்தன்மையின் காரணமாகவே அவருக்கு தொழில் சார்ந்த அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘இந்தியன் 2’ படங்களை தங்கள் அனுமதியின்றி தயாரிப்பு செய்ததைத் தொடர்ந்தே அவர் மீது சந்தேகம் எழுந்ததாகவும் கூறினார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் சரிவர பதில் அளிக்காமலும், ஏற்பட்ட நஷ்டத்திற்கு கணக்கு கூறாமலும் கடந்த ஆகஸ்டு மாதம் தங்கள் நிறுவனத்திலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக தங்கள் நிறுவனத்தின் இயக்குநர் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளதாகவும், ஐங்கரன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கருணாமூர்த்தி மற்றும் உதவியாளர் பானு மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, தங்களுக்கு நஷ்டமான பணத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.