Cinema

இந்திய திரைப்பட விழா- ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு புதுச்சேரி அரசு விருது!

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையுடன், நவதர்சன் திரைப்பட கழகம், அல்லயன்ஸ் பிரான்சியஸ் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தி வருகின்றன.

இந்த ஆண்டு புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழாவது நாளை (13ந் தேதி) மாலை 6 மணிக்கு முருகா திரையங்கில் தொடங்குகிறது. முதலமைச்சர் வெ.நாராயணசாமி தலைமை தாங்கி விழாவைத் தொடக்கி வைக்கிறார்.

தொடர்ந்து புதுச்சேரி அரசு சார்பில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘பரியேறும் பெருமாள்’ தமிழ்த் திரைப்படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை முதலமைச்சர் நாராயணசாமி வழங்குகிறார். பல்வேறு தரப்பினராலும் சிறந்த படம் என கொண்டாடப்பட்ட பரியேறும் பெருமாள் படத்தினை இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றுகிறார்.

விழாவில் செய்தித்துறை இயக்குநர் வினயராஜ் வரவேற்கிறார். உதவி இயக்குநர் குமார் நன்றி கூறுகிறார். ஐந்து நாட்கள் நடைபெறும் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் (தமிழ்), நகர்கீர்த்தன் ( வங்காளம்), சூடானி பிரம் நைஜீரியா (மலையாளம்), மகாநதி (தெலுங்கு), ராஜி (இந்தி) ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.