Cinema

அற்பநோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது... மனுவை தள்ளுபடி செய்யுங்க - கே.வி.ஆனந்த்!

பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால் ,ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘காப்பான்’ படத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டில் ‘சரவெடி’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அந்த கதையை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறினேன். எதிர்காலத்தில் இந்த கதையைப் படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். இந்நிலையில், சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். எனவே காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சரவெடி படத்தின் கதை வேறு, காப்பான் கதை வேறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் சார்பில் பதில் மனுவில் மனுதாரரை எந்த காலத்திலும் தான் சந்தித்தது இல்லை என்றும் அடையாளம் தெரியாதவர்களிடம் கதை கேட்பதில்லை, என்றும் சரவெடி படத்தின் கதை வேறு தன்னுடைய கதை வேறு என தெரிவித்துள்ளார்.

மேலும், அற்பநோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே காப்பான் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், விசாரணையை வருகிற திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.