Cinema

ஸ்ரீதேவி மரணம் கொலை தான்! சர்ச்சை கிளப்பும் தடயவியல் நிபுணர்

நடிகை ஸ்ரீதேவி தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் ஹோட்டலில் உள்ள குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார். மதுபோதையில் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது. ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பே இல்லை, இது கொலை தான் என்று அப்பொழுது பேச்சு எழுந்தது.

இந்நிலையில், முன்னாள் கேரள காவல்துறை ஆலோசகரும், தடயவியல் மருத்துவ பேராசிரியருமான டாக்டர் உமாதாதன் குறித்து கேரள டி.ஜி.பி ரிஷிராஜ் மலையாள நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். கேரள போலிஸை ஆட்டிப்படைத்த பல முக்கிய வழக்குகளில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியவர் உமாநாதன். அவர் கடந்த புதன்கிழமையன்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது நினைவாக மலையாள நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தான் ரிஷிராஜ் சிங் ஸ்ரீதேவி மரணம் பற்றி தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில், ”என் நண்பரும், தடயவியல் நிபுணருமான டாக்டர் உமாதாதன் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து என்னிடம் பேசம் போது, அவர் நீரில் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை. அது கொலையாகத் தான் இருக்கும் என்றார்”.

அவர்களது உரையாடலின் போது உமாநாதன் தடயவியல் முறைகளின் படி அது கொலை தான் என்பதை அழுத்தமாக கூற சில காரணிகளையும் முன் வைக்கிறார். அதையும் தனது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் ரிஷிராஜ். “ ஒரு அடி ஆழ நீரில் யாரும் மூழ்கி இறக்க முடியாது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த குளியல் தொட்டி நீரில் மூழ்க முடியாது. யாராவது அவரின் கால்களை பிடித்துக் கொண்டு தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும்” என உமாநாதன் கூறியதாக அந்த கட்டுரையில் ரிஷிராஜ் கூறியுள்ளார்.

”டாக்டர் உமாநாதனின் அனுபவத்தையும், அவரது பணியையும் வைத்து பார்த்தால், ஸ்ரீ தேவி மரணம் குறித்து அவர் சொன்னது சரியாகத் தான் இருக்கும்” என்று ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் ராணியாக வளம் வந்த ஒரு பெரும் நட்சத்திரத்தின் மரணம், ஒரு விபத்து என முடிக்கப்பட்டுவிட்ட போதிலும், இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகளும், பதில் கிடைக்கா கேள்விகளும் எழுப்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.