Cinema

நடிகர் சங்க தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு : தேர்தல் விதிமுறை அமல்!

நடிகர் சங்கத் தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர், விஷால் தரப்பு வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.

நடிகர் சங்க கட்டடப் பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. 6 மாதகால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார் நடிகர் சங்கத் தலைவர் நாசர். தேர்தல் அதிகாரி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தல் விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.