Cinema

பா.ஜ.க.,வுக்கு ஓட்டளிப்பது மனித இனத்தை அழிப்பதற்கு சமம் - மூடர் கூடம் நவீன்

பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கும், மோடியை எதிர்ப்பதற்கும் நீங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவராகவோ, இஸ்லாமிய, கிருத்துவ, சனாதன, ஒடுக்கப்பட்ட தலித்தாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை, மனிதநேய மிக்க மனிதராக இருந்தாலே போதும் என்று மூடர் கூடம் நவீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், பா.ஜ.க மதவாத வெறுப்பரசியல் செய்து கொண்டிருக்கும் ஒரு நாச கட்சி, அதையும் மிகவும் வெளிப்படையாக பகிங்கரமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

காந்தியைக் கொன்றவனை தேசப்பற்றாளன் என்று ஆதரித்து, தேசபக்தி என்னும் சொல்லுக்கு மொத்தமாக காப்புரிமை வாங்கி வைத்தவர்கள் போல இந்த மோடி ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இத்தனை கொடூரங்கள் நடக்கும் போதும் இதை எல்லாம் ஒரு கூட்டம் ஆதரித்து முட்டுக்கொடுத்து கொண்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மோடியை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்று பச்சை குத்தப்படுகிறார்கள்.

மக்களாகிய நாம் தெளிய வேண்டிய நேரம் இது. தேசம் என்பது வெறும் மண்ணல்ல; அது மனிதர்களின் கூட்டமைப்பு. கடந்த 5 ஆண்டுகளில் இங்கு எங்குமே வளர்ச்சி இல்லை. மாறாக, பலர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், தலித் சிறுபான்மையினர் மீது மோசமான தாக்குதல் நடந்துள்ளது. இது எல்லாமே காவி வன்முறை.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் இன்றுவரை ஹிட்லரின் இனவெறிக்கு நாமும் துணை போய்விட்டோமே என்று ஜெர்மானியர்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி நிற்கிறார்கள். நமக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது என்று நவீன் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.