India

VVPAT வழக்கு - ”அச்சத்தை ஏற்படுத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பு” : டி.ராஜா கருத்து!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு சாதமாக முறைகேடுகள் நடப்பதாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேடில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களையும் 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்ததை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில் VVPAT இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100% எண்ணும் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதையடுத்து VVPAT வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, VVPAT வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதளத்தில், "VVPATகளை 100% எண்ண வேண்டும் என்ற கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

VVPAT சீட்டுகளில் பார்கோடு அச்சிடப்பட வேண்டும் என்ற பரிந்துரையின் மூலம், EVMகளில் பதிவான வாக்குகளுக்கும் காகிதச் சீட்டுகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருக்கலாம் என்பதை மறைமுகமாக உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தேர்தல் முடிந்த பிறகு குறைந்தபட்சம் 45 நாட்களுக்குச் சின்னம் ஏற்றும் யூனிட்டை சேமித்து வைப்பதற்கான வழிமுறைகளும் குளறுபடிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் காட்டுகிறது.

வாக்களிக்கும் செயல்பாட்டில் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்த VVPAT இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100% எண்ணும் கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து கோருவோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: 100% VVPAT வாக்குகள் எண்ண முடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு - முழு விவரம்!