ஆனந்த விகடன் இதழில் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் கலைஞர் பற்றி கூறிய செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதுதொடர்பான கேள்விகளின் போது உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் பின்வருமாறு :-
‘கேள்வி: "தாத்தா உங்க படங்கள் பார்த்திருக்காரா?"
பதில்: "முதல் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வெளியானப்போ தாத்தா என்னைக் கூப்பிட்டு, 'என்னடா, படம் வெளியாகியிருக்காமே... சொல்லவே யில்லை'ன்னு கேட்டார். 'ஆமா தாத்தா'ன்னு சொன்னேன். 'பெரிய ஹிட் போலிருக்கு. என்கிட்ட காட்டவேயில்லை'ன்னார்.
'இல்ல தாத்தா. நீங்க பிஸியா இருப்பீங்க. அதான்'னு சொன்னேன். 'எனக்கு உன் படத்தை உடனே பார்க்கணும். ஏற்பாடு பண்ணு'ன்னு சொன்னார். உடனே தாத்தாவுக்கும் பாட்டிக்கும் போட்டுக் காட்டினேன். படம் பார்த்துட்டு, 'பரவாயில்லைடா. முதல் படம் மாதிரியே தெரியலை'ன்னார்.
அந்தப் படம் மட்டும்தான் பார்த்தார். அதுக்கு மேல அவருக்கு உடல்நிலை சரியில்லாமப் போயிடுச்சு. என்னுடைய 'மனிதன்' படத்தை அவருக்குப் போட்டுக் காட்டணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா, அது நடக்காமல்போனது ரொம்ப வருத்தம். இப்போ 'நெஞ்சுக்கு நீதி' சமூகநீதியைப் பேசுற படமா இருந்தது. அதை தாத்தா பார்த்திருந்தா ரொம்பப் பெருமைப்பட்டிருப்பார்னு நினைக்கிறேன்."
நன்றி: 'ஆனந்த விகடன்' 30.11.2022