சென்னை ஐஐடி வளாகத்தில் சபர்மதி பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி யாரோ உள்ளே வருவதாக அங்கு தங்கியிருந்த மாணவிகள் ஐஐடி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விடுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஐஐடி நிர்வாகத்தினர் தினசரி சோதனை செய்துவந்தனர்.
அப்போது கடந்த 17ம் தேதி 5 மணிக்கு 'புர்கா' அணிந்து சந்தேகப்படும் வகையில் ஒருவர் சபர்மதி பெண்கள் விடுதிக்குள் செல்லும் காட்சி பதிவானது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அந்த சந்தேக நபரை பின்தொடர்ந்தனர். எனினும் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகிகள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலிஸார் ஐஐடி வளாகம் முழுவதும் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் ,அந்த நபர் உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் அசோக் நகர் பகுதியை ஷேர்நத் ரோகன் லால்(26) என்பதும், இவர்சென்னை ஐஐடியில் முடித்த முன்னாள் மாணவன் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர் இருக்கும் இடத்தை அறிந்து போலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் அவர் முன்னரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டு ஐஐடி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
பின்னர் அவரின் மொபைல் போனை எடுத்து சோதனை செய்ததில், அதில் மாணவிகளின் வீடியோகள் இருந்ததை கண்டுபிடித்த போலிஸார், அதனை நீக்கினர். மேலும், அவர் கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை எடுத்தது தெரியவந்த நிலையில், மேல் கட்ட நடவடிக்கையை போலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.