வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 68 அரசுப் பள்ளி மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 4 நாட்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "அரசு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம். கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்துச் செல்ல வேண்டியது.
ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக அப்போது அவர்களை அழைத்துச் செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை அழைத்துச் செல்கிறோம். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சி, துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை மாணவர்களுக்குச் சுற்றிக் காட்ட உள்ளோம். நான்கு நாட்களும் மாணவர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன்.
புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார். ஆனால் புதிய கல்விக் கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். மேலும் மாநில கல்விக் கொள்கை வகுக்கக் குழு அமைத்துள்ளார். இதை அண்ணாமலை போன்றவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
மாநில கல்விக் கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும்" என தெரிவித்துள்ளார்.