தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30.5.2021) ஈரோடு மாவட்டம், பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அம்மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 400 கூடுதல் படுக்கை வசதிகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 5 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவினை திறந்து வைத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துமிக்க உணவின் தரத்தை ஆய்வு செய்தார்கள். பின்னர், 20 கார் ஆம்புலன்ஸ் சேவையினையும் தொடங்கி வைத்து, 6 மருத்துவர்களுக்கும், 4 செவிலியர்களுக்கும் தற்காலிக பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வுகளில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.க.விஜய கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.