திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் தொடர் மழையால் கள்ளக்கிணறு பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால், கள்ளக்கிணறு கிராமமக்கள் கம்பிகள் மூலம் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் சுமார் 30 க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் இருந்து வருகின்றது. இந்த கிராமங்களுக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் கிராம மக்கள் காட்டுப்பகுதிக்குள் நுழைந்து முக்கிய சாலைக்கு வருவார்கள்.
அதுமட்டுமல்லாது, கீழ்மலை பகுதியில் இருந்து கள்ளகிணறு உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லவேண்டும் என்றால், கள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும்.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால், கே.சி பட்டி அருகேயுள்ள கள்ளகிணறு கிராமத்தை கடந்து செல்லும் ஆற்றில், மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கள்ளகிணறு கிராம மக்கள், ஆற்றை கடப்பதற்காக இரு புறங்களிலும் கம்பிகளை கட்டி, அந்த கம்பியை பிடித்தவாறு ஆற்றை கடந்து செல்கின்றனர்.
இதுபோன்று ஆற்றைக் கடந்துச் செல்லும் நிலை ஏற்படுள்ளதால், இந்த கிராமத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கே சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கள்ளகிணறு பகுதியை கடக்க பாலம் கட்ட பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், அ.தி.மு.க அரசு எங்கள் கோரிக்கைகளை இதுவரை ஏற்கவில்லை என இம்மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது பருவ காலம் முடிவதற்க்குள் தற்காலிக பாலமாவது ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.