தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் 3,882 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3,807 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 75 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்து வருகிறது. இன்றும் சென்னையில் மட்டும் 2,182 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னையைத் தவிர்த்து, மதுரையில் 297 பேருக்கும், செங்கல்பட்டில் 226 பேருக்கும், சேலத்தில் 178 பேருக்கும், திருவள்ளூரில் 147 பேருக்கும், ராமநாதபுரத்தில் 111 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 31,521 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று 2,852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளர். இதனால், இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 926 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 63 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது.