சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியம் என பேசியிருந்தார்.
இதுகுறித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு இன்று சட்டப் பேரவையில் பேசினார். “இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என மத்திய அமைச்சர் கூறியுள்ள நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உண்மைக்குப் புறம்பான கருத்தை சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் அவர் மீது பேரவை விதிகளின்படி உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சபாநாயகரை வலியுறுத்தினார்.
ஆனால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் பேச்சில் உரிமை மீறல் ஏதுமில்லை என சபாநாயகர் கூறினார். இதைக் கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் அடையாள வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன். அப்போது அவர் பேசியதாவது :
“இரட்டை குடியுரிமை அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது. மத்திய அமைச்சர் இரட்டைக் குடியுரிமைக்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் கொடுக்க முடியாது என்கிறார். இங்கே இருக்கும் எடுபிடிகள் கொடுப்போம் என்று சொல்வது அவையை திசை திருப்புவதாக இருக்கிறது.
சபாநாயகரிடம் சென்று கூட நான் சொன்னேன். குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது. அவர்களே முடியாது என்கிறார்கள். மாநில அமைச்சர் கொடுப்பேன் என்கிறார். நீங்கள் சொன்னால் நாங்கள் வேண்டுமானால் மன்னித்து விடுகிறோம் என்றேன். ஆனால், சபாநாயகரும் அமைச்சர் சொல்வதுதான் சரி என்கிறார். இப்படிப்பட்டவரை என்ன செய்வது? எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம்” எனத் தெரிவித்தார்.