தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்துள்ள நிலையில், அ.தி.மு.கவினர் தேர்தல் அதிகாரியைத் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிவடைந்த நிலையில் பரிசீலனை பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடலூர் மாவட்டம் முழுவதிலும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு என மொத்தம் 20,520 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவற்றில் 20,370 மனுக்கள் ஏற்கப்பட்டன. 150 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று மாலை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு அ.தி.மு.கவினர் தாங்கள் கூறும் சின்னங்களையே ஒதுக்கவேண்டும் என வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.கவினர் சிலர் கடலூர் ஒன்றிய தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் தேர்தல் அதிகாரியான அருளரசனை அ.தி.க.வினர் தள்ளிவிட்டு தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரியை அ.தி.மு.கவினர் தாக்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுக்க பல மாவட்டங்களிலும் அ.தி.மு.க-வினர், எதிர்க்கட்சியினரின் வேட்பு மனுக்களை நிராகரிக்க வற்புறுத்துவதாக புகார்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.