பருவமழை காலகட்டத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதகப்போக்கின் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயத்தில், நெல்லை, தூத்துக்குடி, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 25-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் நெல்லை சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், கோவை மேட்டுப்பாளையத்தில் 9 செ.மீ, திருச்செந்தூர், மணியாச்சியில் 7 செ.மீ, கோத்தகிரியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.