தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றைய தினம் வானிலை மையம் வெளியிட்ட தகவலில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டது. அதனால் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வானிலை மையம் தற்போது வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது வடதமிழகம் - தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. அதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.