இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அக்கட்சி தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.
ஆனால் பா.ஜ.கவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பின்னடைவை இந்திய பெருளாதாரம் சந்தித்து வருகிறது. இதனை மூடிமறைக்கப் பல வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டாலும் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
எந்தாண்டும் இல்லாத அளவிற்கு பா.ஜ.க அரசினால் சிறு குறு தொழில்கள் மட்டுமின்றி பெரும் நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தை எட்டியுள்ளன. குறிப்பாக கடுமையான வீழ்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் துறையின் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
மிகப்பெரிய நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே, மாருதி, டி.வி.எஸ் என உற்பத்தி நிறுவனங்களும், ஆட்டோ மொபைல் துறை சார்ந்த நிறுவனங்களும் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் தொழிற்சாலைகளை மூடியும், பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியும் வருகின்றன.
இந்நிலையில், மோடி அரசோ இந்தியாவில் எந்த பொருளாதார சரிவும் ஏற்படவில்லை என முட்டுக்கொடுத்து வருகிறது. இவற்றையெல்லாம் விட மோடி அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் ஆன நிலையில் அதனைக் கொண்டாடவும் முடிவெடுத்திருக்கிறது.
இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தர பிரதேச மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “இந்திய தேசத்தின் பொருளாதாரம் ஆழ்ந்த படுகுழியை நோக்கி விழுந்துள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் ஏற்படுட்ட சரிவு சந்தையில் நம்பிக்கையிழப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போது தான் மத்திய அரசு விழித்துக்கொள்ளப் போகிறது" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக மோடி அரசின் 100 நாள் கொண்டாட்டமாக ஆட்டோமொபைல், சுரங்கத்துறையின் அழிவையே கொண்டாட முடியும் எனக் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.