தமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. இந்த விலை உயர்வு திங்கள் முதல் அமலுக்கு வருகிறது. பால் கொள்முதல் விலை உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த விலை உயர்வு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்த்தப்பட்டு 32 ஆகவும், எருமைப்பால் ரூ.6 உயர்த்தி ரூ. 41 ஆக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 4.60 இலட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச் செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதால் ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள், பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தின. இதனைத் தொடர்ந்து ஆவின் பாலின் விலையும் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார்.
கொள்முதல் விலை உயர்வுக்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கும் அதேவேளையில், விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவை காரணம் காட்டுவதை தவிர்த்து விட்டு, ஆவின் பால் நிறுவனத்தில் ஆளுங்கட்சியினரால் நடத்தப்படும் ஊழல் முறைகேடுகளை நிறுத்தினாலே, பால் விலை உயர்த்த வேண்டிய தேவை ஏற்படாது என்பது மக்கள் கருத்தாக உள்ளது.