ஈரோடு குமலன்குட்டை அரசுப்பள்ளியில், இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தங்களுக்கு லேப்டாப் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலிஸார் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமலன்குட்டை அரசுப்பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
தங்களுக்கு லேப்டாப் வழங்காததைக் கண்டித்து சில மாணவர்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு எம்.எல்.ஏ தென்னரசு, “ஓசியில குடுக்கற லேப்டாப்புக்கு இவ்ளோ பேச்சு பேசறீங்க..” என்று மாணவர்களிடம் திமிராகக் கேட்டார்.
இதனைக் கேட்ட மாணவர்கள் சிலர் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மாணவர்களை கடுமையாக மிரட்டினார்.
இதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் தட்டிக்கேட்ட போது, “ நீ யாருய்யா.. எங்கள கேள்வி கேட்க.. உன்ன யாரு உள்ளவிட்டா” என்று மோசமாக மிரட்டினார். இதனை வீடியோ எடுத்த பத்திரிகையாளர்கள் சிலரை அங்கிருந்த அ.தி.மு.க குண்டர்கள் தாக்கினர்.
அப்போது எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கத்தின் மகனும், ஈரோடு மாவட்ட மாணவரணிச் செயலாளரான ரத்தன் பிரித்திவ், “யார கேட்டு வீடியோ எடுக்கறீங்க.. உங்களை எல்லாம் சும்மாவிடக்கூடாது” என்று சொல்லி, அங்கிருந்த பத்திரிகையாளரின் கன்னத்தில் அறைந்தார்.
மேலும் அங்கிருந்த அ.தி.மு.க.,வினரும் பத்திரிகையாளர்களை கடுமையாகத் தாக்கினர். ஆனால், இது அனைத்தையும் அங்கிருந்த போலிஸார் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது உரிமைக்காகப் போராடும் மக்களை ஆளும் அ.தி.மு.க அரசு கடுமையாகத் தாக்கி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையும் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.