புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே கடந்த 1998-ஆம் ஆண்டு பெரியார் சிலையை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். இந்நிலையில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் விதிமுறைப்படி பெரியாரின் சிலையும் துணியால் மூடப்பட்டிருந்தது.
இதனிடையே பெரியார் பொதுவான தலைவர் என்பதால் அவரது சிலை மீது மூடப்பட்டிருந்த துணியை அகற்றலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் அனுமதி அளித்திருந்தார். அதன்படி துணியால் மூடப்பட்டிருந்த பெரியார் சிலையை கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் கட்சி நிர்வாகிகள் அகற்றியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பெரியார் சிலையின் தலைபாகம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கீழே கிடந்துள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அருகில் குடியிருப்போர்கள், மற்றும் தெருவாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே உடைந்த சிலையை மூடி வைக்க போலீசார் முயற்சி செய்தபோது திக கட்சியினர், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை சிலை திறந்தே இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து மேற்படி சிலையை மூடும் நடவடிக்கையை போலீசார் எடுக்கவில்லை. மாவட்ட எஸ்பி செல்வராஜ் சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டு வருகிறார். பரபரப்பான தேர்தல் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.