சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாய் வாகனம் செல்வதற்காக மருத்துவ அவசரப் பணிகளுக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி உடனான காணொளிக் காட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி சென்றார். இதற்காக அவர் செல்லும் வழியில் வந்த வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வைத்தனர்.
இதன் காரணமாக நீண்ட நேரம் ஆம்புலன்ஸும், அத்தியாவசிய பணிகளுக்காகச் சென்ற வாகனங்களும் காக்க வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு மக்களிடையே முகக்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ‘டைம்ஸ் நவ்’ வீடியோவை பகிர்ந்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முழு ஊரடங்கை அறிவித்துவிட்டு தங்கள் வாகனம் மட்டும் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும் ஆம்புலன்ஸையும் நிறுத்தியதற்காக முதலமைச்சர் பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு கொண்டு வந்தது போல, தற்போது அத்தியாவசிய தேவைக்கு செல்லும் வாகனங்களையும் வெகு நேரம் நிறுத்தி வைத்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. இதுவல்லவா மக்களுக்கு ஆற்றும் பணி என சாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.