இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அக்கட்சி தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.
ஆனால் பா.ஜ.கவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பின்னடைவை இந்திய பெருளாதாரம் சந்தித்து வருகிறது. இதனை மூடிமறைக்கப் பல வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டாலும் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
எந்தாண்டும் இல்லாத அளவிற்கு பா.ஜ.க அரசினால் சிறு குறு தொழில்கள் மட்டுமின்றி பெரும் நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தை எட்டியுள்ளன. குறிப்பாக கடுமையான வீழ்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் துறையின் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
மிகப்பெரிய நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே, மாருதி, டி.வி.எஸ் என உற்பத்தி நிறுவனங்களும், ஆட்டோ மொபைல் துறை சார்ந்த நிறுவனங்களும் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் தொழிற்சாலைகளை மூடியும், பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியும் வருகின்றன.
இந்நிலையில், சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் சார்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர். அதில், “எனது சார்பாக ட்விட்டரை எனது குடும்பத்தினர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
நீதி மற்றும் அநீதியை வேறுபடுத்திப் பார்க்கும் ஏழைகளின் திறனைக் கண்டு நான் வியப்படைகிறேன். பொருளாதாரம் குறித்து ஆழ்ந்த கரிசனம் கொண்டுள்ளேன். பொருளாதார சரிவால் முதலீடுகள், வேலைவாய்ப்பு, வர்த்தகம் குறைந்து நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருமானங்கள் குறைந்ததால் மிக மோசமாக ஏழை மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் முடங்கி கிடைக்கும் பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசின் திட்டங்கள் எங்கே?” என அவர் தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.