சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதனால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தமிழகம் முழுவதும் அண்மைக்காலங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதியுறுகின்றனர்.
இவ்வாறு இருக்கையில், கனமழை பெய்துவரும் நேரத்தில் மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
அதில், சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மேலும், மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும் என்றும், வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.