நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர்களின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் பதில், "அச்சம், சுய இரக்கங்கள், பாதுகாப்பின்மையால் பிரதமர் மோடி பாதிக்கப்பட்டிருக்கிறார். நமது நாட்டின் முதல் பிரதமரும், நீண்டகாலமாக பிரதமராக இருந்தவருமான ஜவஹர்லால் நேரு விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
நேருவின் சித்தாந்தத்தை மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது, அழிப்பது என்னும் ஒரேயொரு திட்டத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு மோடி செயல்படுகிறார், நேருவின் பெயரில் உள்ள முதல் எழுத்தான N-ஐ அழித்துவிட்டு, P எனும் எழுத்தை மோடி பதித்து வருகிறார். உண்மையில் P என்றால் அற்பத்தனம் மற்றும் ஆத்திரம் என்பதையே குறிக்கும்.
பிரதமர் மோடி என்ன செய்தாலும், நாட்டின் சுதந்திரத்துக்காக நேரு அளித்த மிகப்பெரிய பங்களிப்புகளையும், ஜனநாயக, மதசார்பற்ற, அறிவியல் ரீதியிலான மற்றும் சுதந்திரமான நாட்டை கட்டமைப்பதில் அவர் படைத்த சாதனைகளையும் மோடியால் பறிக்க முடியாது.
இடைவிடாத தாக்குதல் இருந்தபோதிலும், ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியம் உலகம் காணும் வகையில் வாழும், அவர் தொடர்ந்து வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பார்" என தெரிவித்துள்ளார்.
நேரு நினைவிடத்தின் வரலாறு என்ன?
பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவின் தலைமைத் தளபதியின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. 1948 விடுதலைக்கு பின்பு இந்த இடம் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது. சுமார் 16 வருடங்கள் இங்கு வாழ்ந்த அவர் இங்கேயே தனது இறுதி மூச்சை விட்டார்.
அவர் இறந்த பிறகு, தீன் மூர்த்தி பவன் அவரது நினைவிடமாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இது பண்டித நேரு நினைவிடம் என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது ஒன்றிய அரசு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர்களின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.