கர்நாடகாவில் இருந்து திருவனந்தபுரத்திற்குத் தினமும் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் கடந்த ஞாயிறன்று மாவேலி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பின்னர் கன்னூர் ரயில் நிலையத்தில் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர் மற்றும் இரண்டு ரயில்வே போலிஸார் ரயிலில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டனர். அதற்கு அவர் தனது டிக்கெட்டை காணவில்லை என கூறியுள்ளார்.
பின்னர் விசாரித்தபோது டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தது தெரியவந்தது. மேலும் அந்த நபர் மது அருந்திய நிலையில் போதையில் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போலிஸ்காரர் அந்த பயணியைத் தனது காலால் எட்டி உதைத்துத் தாக்கினார். அதை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணியை தாக்கிய போலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து ரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட காவலரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் டிக்கெட் பரிசோதனையாளர், உடன் வந்த மற்றொரு போலிஸாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.