புதுச்சேரி மேட்டுப்பாளையம், சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவா. இவர் நண்பர்களுடன் சேர்ந்து நோணாங்குப்பம் பகுதியில் உள்ள சுண்ணாம்பாற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
பின்னர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஜீவா சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாக ஜீவாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து இதுகுறித்து போலிஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ஜீவாவின் உடலை தேடினர். இரவு வரை தேடியும் அவரது உடல் கிடைக்காததால் மீட்புப் பணியைக் கைவிட்டனர்.
பிறகு நேற்று காலை ஜீவாவின் உடல் ஏரியில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலைமீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே மகன் ஏரியில் மூழ்கிய செய்தி கேட்டவுடன் அவரின் தாய் லட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பிறகு அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகன் இறந்த செய்தியைக் கேட்டு தாயும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.