கொரோனா பெருந்தொற்றில் இந்தியா மூச்சுவிட முடியாமல் சிக்கித் திணறிவருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுகாதார கட்டமைப்புகள் முழுமையாக முடங்கியுள்ளது.
இதனால், இம்மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றால் அதிக அளவில் மரணங்களும் ஏற்பட்டு வருகிறது. ஆனால், இந்த மரணங்களை பா.ஜ.க அரசுகள் குறைத்துக் காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கொரோனா மரணங்கள் குறைத்துக்காட்டப்படுவதாக, அம்மாநில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை 1.23 லட்சம் பேருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு இதே காலத்தில் 58 ஆயிரம் பேருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அகமதாபாத் நகரத்தில் கடந்த ஆண்டு 7,786 இறப்பு சான்றிதழ்கள் வழங்கிய நிலையில், இந்த ஆண்டு 13,593 இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்படி ராஜ்கோட், சூரத், வதோதரா ஆகிய நகரங்களைக் குறிப்பிட்டு, புள்ளி விவரங்களுடன் எவ்வளவு இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் நேற்றைய நிலவரப்படி 9,995 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் 104 பேர் கொரோனாவால் மரணமடைந்தனர். இதனால் மாநிலத்தில் இதுவரை 7.35 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 8,944 பேர் இறந்துள்ளனர்.
இந்த புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, ஆளும், பா.ஜ.க அரசோ கொரோனா மரணங்களைக் குறைத்துக் காட்டுகிறதோ என எண்ணத்தோன்றுகிறது என அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.