புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் காசியாபாத் பகுதியில் நெடுஞ்சாலை விளக்குகள் அனைத்தும் நேற்று இரவு முழுவதும் அணைக்கப்பட்டன. இதனால், விவசாயிகள் இருளிலேயே அங்கேயே தங்கியிருந்தார்கள்.
தங்களுடைய டிராக்டர்கள் வெளிச்சத்தை ஒளிர விட்டு ஒருவித அச்சத்துடன் நேற்று தூங்காமல் இருந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பாகுபத் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தி உள்ளனர். அந்த சாலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அனைவருமே தற்போது அங்கிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அரசு ஆதரவு சங்கம் என்று கூறப்பட்ட ஒரு பிரிவினர் போராட்டத்தை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து நோய்டா சில்லா எல்லை தற்போது திறக்கப்பட்டுள்ளது.
நாளை சிங்கு உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க தலைவர்கள் மீது தேச பாதுகாப்பு, உபா உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் 26 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.