விவசாயத்தை தனியார் மயமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், ஒடிசா போன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் 29வது நாளாக போராடி வருகின்றனர்.
குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்கவும் மறுத்ததால் விவசாயிகள் மற்றும் மத்திய அரசுடனான 5 கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியை சந்தித்தன. இதனால், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை கைவிட போவதில்லை என்ற முழக்கத்தை கையில் ஏந்தி விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
வேளாண் சட்டத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் மாநில முதலமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் 2 கோடி பேரிடம் காங்கிரஸ் கட்சி கையெழுத்துகளை பெற்றுள்ளது.
இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைப்பதற்காக டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக செல்ல முற்பட்டனர். அதனை தடுத்த போலிஸார் அவர்களை கைது செய்தது.
பின்னர் ராகுல் காந்தி மற்றும் குலாம் நபி ஆசாத்தை மட்டும் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்கட்சிகளின் எதிர்ப்பு அனைத்தையும் புறக்கணித்து நிறைவேற்றிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
பிரதமர் யாருக்காக இந்த சட்டகளை நிறைவேற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். விவசாயத்தை நம்பி லட்சக்கணக்கானோர் பிழைப்பு நடத்துகிறார்கள். அவர்களை எல்லாம் இந்த சட்டங்கள் பாதிக்கிறது. தனிப்பட்ட நலனுக்காக மட்டுமே பிரதமர் இந்த சட்டங்களைக் கொண்டுவந்துள்ளார்.
யதார்த்தம் தெரியாமல் ஒரு சிலருக்காக மட்டும் பிரதமர் ஆட்சி நடத்துகிறார். விவசாயிகளைச் சந்திக்க போலீஸ் அனுமதி மறுக்கிறார்கள். பேரணிக்கு கூட எம்.பி.களைக் அனுமதிக்க முடியாது என்று தடுத்து கைது செய்துள்ளனர். இந்தியாவில் ஜனநாயகம் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. முதலாளிகள் சொல்வதைத்தான் பிரதமர் கேட்கிறார். அவருக்கு ஒன்றும் தெரியாது. அவரிடம் திறமை என ஏதும் இல்லை.” என கூறியுள்ளார்.