தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தால், மருத்துவர் ஒருவரே உயிரிழந்தவரின் உடலை டிராக்டரில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஸ்ரீராம், அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் அங்கு கொரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் 43 வயதான நபர் ஒருவர் அந்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இருந்துள்ளது.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு டிராக்டரை வரவழைத்துள்ளார் மருத்துவர் ஸ்ரீராம். கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடல் என்பதற்காக டிராக்டரை இயக்க ஓட்டுநர் மறுத்த நிலையில், மருத்துவர் ஸ்ரீராமே, பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு டிராக்டரில் உடலை ஏற்றி அதனை மயானத்திற்குக் கொண்டு சென்றார்.
பின்னர், இறுதிச் சடங்குகளை முடிக்கும் வரை மருத்துவர் ஸ்ரீராம் மயானத்திலேயே இருந்து மேற்பார்வை செய்துள்ளார். கொரோனா நோயாளியின் உடலை எடுத்துச் செல்ல பலரும் தயக்கம் காட்டி வரும் நிலையில், மருத்துவரின் மனிதாபிமானமிக்க செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.