கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைர்ஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான முயற்சிகள் அனைத்தையும், உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தற்போதுவரை 14 வகையான தடுப்பு மருந்துகள் ஆய்வில் பல்வேறு கட்டங்களை அடைந்துள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது :
“கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 100 தடுப்பூசி மருந்துகள் வெவ்வேறு கட்ட சோதனையில் இருக்கின்றன. இந்தியாவில் 14 தடுப்பூசி மருந்துகள் பரிந்துரைக்கு வந்துள்ளன. அதில் நான்கு தடுப்பூசி மருந்துகள் இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டிவிடும்.
தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறை நீண்ட காலமானது என்பதால், கொரோனா வைரஸுக்கு விரைவிலேயே தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது. எந்தவொரு தடுப்பூசியையும் உருவாக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகும்.
எனவே, தடுப்பூசி அல்லது சிகிச்சையை கண்டறியும் வரையில், சமூக விலகல், மாஸ்க் அணிவது, உடல் சுகாதாரத்தை பின்பற்றுவது ஆகியவற்றைத் தொடரவேண்டும். அதுவே நோய்க்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு” எனத் தெரிவித்துள்ளார்.