குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்ததில் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறி, பெரும் சேதத்திற்கு வழிவகுத்த மத்திய பா.ஜ.க அரசும், டெல்லி காவல்துறையைக் கட்டுப்படுத்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுமே இதற்குப் பொறுப்பு என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் நிகழ்ந்து வரும் வன்முறை குறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வலியுறுத்தி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்தனர்.
அப்போது, டெல்லி வன்முறை குறித்து பா.ஜ.க அரசுக்கு உரிய அழுத்தம் தர வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனர். அதன்பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சோனியா காந்தி பேசியதாவது, “டெல்லி கலவரம் பற்றி ஜனாதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளோம். டெல்லியில் நடத்த வரலாறு காணாத கலவரம் மத்திய அரசும், உள்துறை அமைச்சரும் செயலற்று இருந்ததால் தொடர்ந்து நடந்துள்ளது.
நான்கு நாட்களாக தலைநகரில் வன்முறை தலைவிரித்து ஆடியது. டெல்லி கலவரத்தின்போது ஏராளமான பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசும், மாநில அரசும் அதை பார்வையாளர்கள் போல வாய்மூடி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
மக்களின் வாழ்க்கையை, சுதந்திரத்தை, சொத்துகளைப் பாதுகாக்க குடியரசுத் தலைவர் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். கலவரத்தைக் கட்டுப்படுத்த திறன் இல்லாத உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.” எனத் தெரிவித்தார்.