தமிழகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் இருந்து Z+ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தி.மு.க மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தி.மு.க தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த Z+ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தலைவருக்கு கோடிக்கணக்கான தொண்டர்களின் அன்பே அரணாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, “தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு விலக்கிக்கொண்டு இருப்பது தவறான நடவடிக்கையாகும்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இலட்சியங்களுக்கு எதிராக, திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு மு.க.ஸ்டாலின் அவர்களே சரியான எதிர்ப்பைக் காட்டி வருகிறார். மக்கள் செல்வாக்கு அவருக்கு நாளும் அதிகரித்து வருகிறது.
தந்தை பெரியார் சிலையை உடைப்பது போன்ற கேடான செயல்கள் தொடர்ந்து வருகின்றன.இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது.
அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை விலக்கிக்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.