குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்தியா கேட் முன்பு நடுங்கும் குளிரிலும் தீவிரமாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் இஸ்லாமியர்கள் நீங்கலாக மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது.
ஆனால் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு இதமளிக்கும் வகையில் சீக்கியர்கள் பலர் தேநீர் விநியோகித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவும் அளித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை காண்போர் இப்படியொரு மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் பேரில் மக்களை பிரிக்க முயலும் எந்த சட்டத்துக்கு இடமில்லை என கருத்து தெரிவித்து மேலும் குடியுரிமை சட்டத்துக்கு வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.