தி.மு.க

“ஆட்சியைக் காப்பாற்ற பா.ஜ.க எதைச் செய்தாலும் அ.தி.மு.க ஆதரிக்கும்” - திருச்சி சிவா எம்.பி பேச்சு!

“ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.க எதைச் செய்தாலும் அ.தி.மு.க துணை செல்கிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார் திருச்சி சிவா எம்.பி.,

“ஆட்சியைக் காப்பாற்ற பா.ஜ.க எதைச் செய்தாலும் அ.தி.மு.க ஆதரிக்கும்” - திருச்சி சிவா எம்.பி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு ஆதரவளித்த அ.தி.மு.கவை கண்டித்தும் புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க சார்பில் புதுச்சேரி - முதலியார்பேட்டை தபால் நிலையம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாநிலங்களவை எம்.பி., திருச்சி சிவா பங்கேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி., பேசியதாவது, “இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பெற்றதில் இருந்து தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற சட்டங்கள் அத்தனையும் கறுப்பு சட்டங்களாகவே உள்ளன. இந்தியாவின் தனித்துவத்தைச் சிதைக்கும் வகையில் பா.ஜ.க செயல்படுகிறது. அரசியலமைப்பு சட்டம் முடங்கிப் போகும் அளவுக்கு குடியுரிமைச் சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்க அ.தி.மு.க துணையோடு மாநிலங்களவையில் சட்டம் நிறைவேறியுள்ளது. வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிய அ.தி.மு.கதான் காரணம். தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு, காஷ்மீரில் பல தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. ஜம்மு, காஷ்மீருக்காக முதலில் குரல் கொடுத்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தியா முழுவதும் கலைஞர் வழியில் உரிமைக்கு குரல் கொடுக்கும் இயக்கமாக தி.மு.க உள்ளது.

முத்தலாக் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் என பல சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். என்.ஐ.ஏ அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்கும் சட்டம் இயற்றினர். மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்படுகிறது. பா.ஜ.க இயற்றிய அனைத்து கறுப்பு சட்டங்களுக்கும் எதிர்ப்புக் குரல் கொடுத்தது தி.மு.க மட்டும்தான்.

“ஆட்சியைக் காப்பாற்ற பா.ஜ.க எதைச் செய்தாலும் அ.தி.மு.க ஆதரிக்கும்” - திருச்சி சிவா எம்.பி பேச்சு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்கிறோம். அதை தராமல் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுகிறார்கள். அடக்குமுறை அரசாங்கத்தை சர்வாதிகாரத்துடன் பா.ஜ.க செயல்படுத்தி வருகிறது.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாட்டு குடிமக்களை மதம், ஜாதி,இனத்தின் பெயரால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என தீர்மானிக்கக்கூடாது என்கிறது அரசியலமைப்பு சட்டம். ஆனால் தற்போது பா.ஜ.க கொண்டு வரும் சட்டம் மதத்தின் ரீதியில் பிரிக்கிறது. எனவேதான் இதனை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துப் போராடுகிறோம்.

ஒரு சில மதங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது ஏன் எனக் கேட்டால் பதில் இல்லை. இலங்கையில் இருந்து வந்தவர்கள் மனிதர்கள் இல்லையா எனக் கேட்டால் பதில் இல்லை.

இந்த சட்டத் திருத்த மசோதாவில் இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என கோருகிறோம். அ.தி.மு.க எம்.பிக்கள் நியாயத்தை உணர்ந்து வாக்களித்திருந்தால் இந்த மசோதா நிறைவேறியிருக்காது. ஆட்சி அதிகாரம் கிடைக்காவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்யவேண்டும். ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.க எதைச் செய்தாலும் அ.தி.மு.க துணை செல்கிறது.

பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன. இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க தொடர்ந்து பாடுபடும். நாடு மோசமான நிலையில் உள்ளது. இதனை நாம் மீட்டெடுக்க வேண்டும்.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories