கொரோனா பரவலின் இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது அலை ஏற்பட்டும் பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் தேவைப்பட்டால் கூட்டம் ஏதும் இல்லாத இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்த்துக்கொள்ளலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி அண்மை நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தளவிலேயே பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,183 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது.
இது கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) எண்ணிக்கையை கணக்கிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் நேற்று (ஏப்.,17) மட்டுமே 214 பேர் இறந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் கேரளாவில் மட்டுமே 62 இறந்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ, மீரட், காசியாபாத் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது அம்மாநில அரசு.
அதேபோல, டெல்லிக்கு செல்வோரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் கூறப்படுகிறது. ஏனெனில், முன்பு வந்த மூன்று அலைகளும் டெல்லியில் இருந்துதான் பெரும்பாலும் தொடங்கியது என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.