தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி நாளை (ஜன.,6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் வரும் ஞாயிறன்று (ஜன.,09) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஞாயிறு முழு ஊரடங்கின் போது செயல்படும் சேவைகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:-
அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது.
உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும்.
உணவு டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் காலை 7 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். இதர இ-காமர்ஸ் சேவைகளுக்கு அனுமதி இல்லை.
ஜனவரி 9 மற்றும் வார நாட்களில் இரவு ஊரடங்கின் போது விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக நிலையங்களுகு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். பயணத்தின் போது பயணச்சீட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து கடற்கரைகளிலும் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொள்ள அனுமதி.
வழிப்பாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.