திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து தமிழக முதலமைச்சர் உடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
அதனை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதாக கூறினார். இந்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வரக்கூடிய நாட்களில் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு உடன் வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். மேலும், இனி வரும் நாட்களில் சென்னையில் உருமாறிய கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.
நாளொன்றுக்கு 150 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி உள்ளதாகவும், முடிவு வருவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு மற்றும் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாளை தமிழக முதலமைச்சர் உடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.