தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று இரவு ஒமைக்ரான் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளை தயார் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஹை ரிஸ்க் பட்டியல் நாடுகளில் இருந்து வந்த 12,503 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களில் உத்தேச பரிசோதனை மூலம் 1947 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 14,450 பேருக்கு பரிசோதனை செய்துள்ள நிலையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
முகக்கவசம் அணிவது குறைந்துள்ளது. மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், கடந்த அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் இல்லை. அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளது. தமிழகத்தில் 40,024 ஆக்சிஜன் படுக்கைகளும், 8600 ஐசியு படுக்கைகளும் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் போதுமான அளவு உள்ளது என்றார்.
பொதுமக்கள் அறிகுறி ஏற்பட்டதும் கவனக்குறைவு இல்லாமல் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அப்போது பொதுமக்களை வலியுறுத்தினார்.
பறவைகாய்ச்சல் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் , பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.