சீனாவின் வூஹானில் இருந்து உலக நாடுகள் அனைத்துக்கு பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். அமெரிக்கா போன்ற நாடுகளில் நான்காவது அலையை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்தியாவில் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சமடையக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நிபுணர்களிடம் இருந்து எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் எண்டமிக் (Endemic) நிலையை அடையும் வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.
அது என்ன எண்டமிக்? அதாவது மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் மக்களின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய அளவில் மாற்றம் உள்ளபோது அந்த நோய் பரவல் சில ஏற்ற இறக்கங்களோடு நிரந்தரமாகவே இருக்கும். உதாரணத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியா காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்குமோ அதேபோல இந்தியாவிலும் இந்த கொரோனா பரவிக்கொண்டே இருக்கும்.
முதல் இரண்டு அலைகளால் பெரிதும் பாதிக்கப்படாத தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மூன்றாவது அலை ஏற்பட்டால் அங்கு கொரோனாவின் தாக்கம் இருக்கும். ஆனால் 2022ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 70 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தியிருப்பார்கள். அப்போது இந்தியாவில் இயல்பு நிலை திரும்பும் சூழல் ஏற்படும்.
குழந்தைகளுக்கு குறைந்த அளவிலான பாதிப்பே கொரோனாவால் ஏற்படுகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவுகளை ஏற்படுத்தி அனைத்து உட்கட்டமைப்புகளையும் தயார் நிலையில் அரசுகள் வைத்திருப்பது நலம் பயக்கும் என சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.