தடுப்பூசி தயாராகும் வரை முகக்கவசம் தான் தடுப்பூசி ஆக செயல்படும். அதுவரை பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய கொரோனா தடுப்பு நிவாரண குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கொரோனா தடுப்பு குழுவினர் கூறியதன் விவரம் பின்வருமாறு:-
தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கும் காலத்தில் அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிந்துதான் கொண்டாட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று குழுவின் தலைவர் வி.கே பால் வலியுறுத்தினார்.
குளிர்காலத்தின்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை வீடுகளிலும், அறைகளிலும் மக்கள் இருக்க வேண்டும்.
மாஸ்க் அணிவது, கைகளை சுத்தம் செய்வது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவைதான் தற்போதைக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஒரே வழி என்றும் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு நாட்டில் குறைந்து வந்தாலும் கேரளா, டெல்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசி தயாரிப்பு தொடங்கினால் அவற்றை பாதுகாப்பதற்கும், கொண்டு செல்வதற்கும் நாடு முழுவதும் 2,800 குளிர்சாதன கிடங்குகளும், 700 குளிர்சாதன வாகனங்களும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.